Home > Work > காகித மலர்கள் [Kakitha Malargal]
1 " பத்மினியும் மனதாழத்தில், அவர்களிடையேயுள்ள பந்தத்துக்கு இந்த அளவு முக்கியத்துவம்தான் அளித்திருக் கிறாளோ, ஒரு வேளை? அப்படியென்றால் தாய்மை அவளைக் கவர்ச்சி குறைந்தவளாக, பாதுகாப்பற்றவளாக உணரச் செய்யலாம். அதே சமயத்தில் அவனைத் தந்தையாக்கியதால் அவனுடைய சகோ சாந்தியடைந்து, அவன் அவள் மீது நன்றி பாராட்டுவானென்று அவர் எதிர்பார்க்கலாம். சமூக ஒழுக்கத்தின் அடிப்படையில் அவனை நிரந்தரமாகச் சிறைப்படுத்திவிட்டதாகத் திருப்தியடையவும் கூடும். ஏன், அவனும் தான் குழந்தை பிறந்த பிறகு அவள் மீது அவனுடைய ஆதிக்கம் உறுதிப்பட்டுவிட்டதாகவும் சமூக நியாயங்களின்படி அவளுக்கு அவனுடைய ஆதரவு இன்றியமையாததாகிவிட்டதென்றும் சுயநலமான ஆசுவாசம் பெறக்கூடும். சே, காதல் கடைசியில் இவ்வளவுதானா? பயன்படுத்திக்கொள்ளல்தான் உண்மையா? "
― Aadhavan , காகித மலர்கள் [Kakitha Malargal]
2 " ஆமாம், வார்த்தைகள் - பல வருடங்கள் புழக்கத்திலிருந்து வரும் தூசும். அழுக்கும் படிந்த வார்த்தைகள் - இந்த வார்த்தைகள், இவற்றைச் சார்ந்து ஸ்திரப்பட்டு விட்டிருக்கும். உருவங்கள், பிம்பங்கள் ஆகியவை மூலம் நாம் ஒருவரை யொருவர் அணுகாமலிருந்தால் நல்லது. "
3 " ஆம், புதுவருடம் பிறந்துவிட்டது. புத்தம் புதியது. இன்னும் தொப்புள் கொடிகூட அறுக்கவில்லை, கழுவப்படவில்லை. சற்றே அழுக்கானது, ஆனால் தூய்மையானது. இந்தக் கைகுலுக்கல்களும், தழுவல்களும் மட்டும் உண்மையானதாகவிருந்தால் இந்த வருடம் முழுவதுமே எவ்வளவு நேசம் நிறைந்ததாகவும் இனிமையானதாகவும் இருக்கும்! "
4 " உங்கள் பகல் நேரங்களை அநேகமாக ஏதாவதொரு ஸ்தாபனத்துக்கு, குறிப்பிட்ட ஒரு மாதச்சம்பளத்துக்கு விற்றிருப்பீர்கள் - மனச்சாட்சிக்கு உடன்பாடற்ற காரியங்களை அந்தச் சம்பளத்தின் பொருட்டுச் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பீர்கள். உங்களுடைய சிந்தனைச் சுதந்திரம், செயல் சுதந்திரம் யாவும் பறிக்கப்பட்டிருக்கும். இந்த நிலைமை ஏற்படுத்தும் குற்ற உணர்வுகளிலிருந்து விடுதலை பெறுவதற்காக, அரசியல்வாதிகளை, அரசியல் அமைப்பைச் சாடுகிறீர்கள். இதில் உங்களுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கிறது; அமைப்பே தவறானதென்று சுட்டிக்காட்டுவதன் மூலம் அமைப்பின் ஒரு சிறு மூலையில் நீங்கள் செய்யும் சிறு தவறுகள் தவிர்க்க முடியாதவை போலவும், மன்னிப்புக்குரியவை போலவும் தோன்றுகின்றன. ஆனால் இது ஒரு மயக்கம்; ஒரு மாஸ்டர்பேஷன். ஆமாம், மிஸ்டர் மாதுர்; நம் நாட்டுச் சிந்தனையாளர்களின் செயலார்வமோ செயல் திறனோ அற்ற மலட்டுத்தனம்தான் நம் தேசத்தை வீழ்ச்சியடையச் செய்துகொண்டிருக்கிறது. "
5 " செல்லப்பா தலைமயிரை விரல்களால் கோதி சரிபார்த்துக் கொண்டான். அங்கிருந்து எடை யந்திரத்தின் கண்ணாடியில் தன் முகத்தை ஒரு முறை பார்த்துக்கொண்டான். அவனுக்கு முதன் முறையாகத் தன்னைப் பற்றி நம்பிக்கையும் ஆசுவாசமும் ஏற்பட்டது. அவனிடம் எந்தக் குறையுமில்லை. தவறான கண்ணாடிகளில் அவன் தன் பிம்பத்தைப் பார்த்துவந்தான். அவ்வளவுதான். இதுதான் அவனுடைய சரியான பிம்பம். இவளைச் சார்ந்து உண்டாகிற பிம்பம். இவள்தான் அவனுக்கேற்ற கண்ணாடி. அவனைச் சிறிதாக்கவோ பெரியதாகவவோ செய்யாத கண்ணாடி. "